கவுகாத்தி: அசாமில் திவா தன்னாட்சி கவுன்சில் தேர்தலில் 16 இடங்களில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. அசாமில் சமீபத்தில் நடந்த போடோலாந்து பிராந்திய கவுன்சிலுக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இங்கு, தனது கூட்டணி கட்சியை கழற்றி விட்டு, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பாஜ கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், இம்மாநிலத்தில் 36 உறுப்பினர்களை கொண்ட திவா தன்னாட்சி கவுன்சிலுக்கு கடந்த 17ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது.இதில், 16 இடங்களில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. மேலும், 12 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. பாஜ.வின் கூட்டணியான அசாம் கன பரிஷத் ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம், இங்கும் பாஜ ஆட்சி அமைப்பது உறுதியாகி இருக்கிறது.