புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், கடந்த மார்ச்சில் மத்திய அரசு முதலில் 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்தது. கொரோனாவுக்கு எதிரான போரில், இந்த முதல்கட்ட ஊரடங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்பட்டது. எனினும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஒரு கோடியை கடந்தது. இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 1.5 லட்சம் இறப்புக்களுடன் ஒரு கோடியை கடந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் திட்டமிடப்படாத முதல் 21 நாள் ஊரடங்கு, பிரதமர் மோடி கூறியது போல் வெற்றி பெறவில்லை. அதற்கு மாறாக, நாட்டில் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையை அழித்து விட்டது. கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது’ என கூறியுள்ளார்.