அரியலூர்: தொடர்ந்து மழை பெய்வதால் திருமானூர் அருகே சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழகாவட்டாங்குறிச்சி வடக்குவீதியில் தார்ச்சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் சாலையில் 4 அடி அகலம், 10 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் அந்த பள்ளத்தை மூடுமாறு ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணனிடம் கூறினார்.
கடந்தாண்டு அதே இடத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டது. தற்போது ஏற்கனவே மூடப்பட்ட பள்ளத்தின் அருகிலேயே மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்மழை காரணமாக ஏற்பட்டுள்ள பள்ளமா அல்லது வரகுகுழி என்கிற முன்னோர்கள் பயன்படுத்திய தானிய சேமிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கிடங்கா என்று பொதுமக்கள் பேசி வருகின்றனர்.