பட்டிவீரன்பட்டி: சித்தேரவு-பெரும்பாறை மலைப்பாதையில் மழைக்கு சரிந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு-பெரும்பாறை மலைச்சாலை 15 கி.மீ. தூரம் உள்ளது. இந்த மலைச்சாலையில் ஆபத்தான பள்ளத்தாக்குகளும், பல ஆபத்தான வளைவுகளும் உள்ளன. தாண்டிக்குடி மலையில் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த குறுகிய ரோட்டை அகலப்படுத்த பல ஆண்டுகாலமாக கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு சித்தரேவு-புல்லாவெளி இடையே 12 கி.மீ. தூரம் மாநில நெடுஞ்சாலைக்கு உட்பட்ட இந்த ரோட்டை 1 மீட்டர் அகலப்படுத்தி 2 பெரிய பாலங்கள் மற்றும் 33 சிறிய பாலங்கள் கட்ட ரூ.6 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சாலை சீரமைப்பு பணி தொடங்கி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. பணி முடிந்து 3 மாதங்கள் கூட முடிவடையாத நிலையில், கடந்த மாதம் பெய்த மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் புல்லாவெளி என்ற இடத்தில் அரிப்பு ஏற்பட்டு தார்ச்சாலை சரிந்து விழுந்தது. சரிந்த ரோட்டில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து சரிசெய்யப்பட்டது. சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் இந்த இடத்தை வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர்.
தற்போது மழை பெய்து வருவதால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த ரோட்டில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சரிந்த சாலையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளை அகற்றிவிட்டு தடுப்பு சுவர் எழுப்பி ரோட்டை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள், மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.