பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்தும் சிறையில் உள்ள வி.என்.சுதாகரனை, நீதிமன்றம் விதித்துள்ள அபராதத்தை செலுத்தியதும் விடுதலை செய்யும்படி பெங்களூரு தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017 பிப்ரவரி 15ம் தேதி முதல் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்தாண்டு முடியும் நிலையில், கடந்த நவம்பர் மாதம் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நீதிமன்றம் விதித்த ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராத தொகையை பெங்களூரு தனி நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஏ.அசோகன், பி.முத்துகுமார் ஆகியோர் செலுத்தினர்.
மற்றொரு குற்றவாளியான வி.என்.சுதாகரனுக்கு அபராத தொகை செலுத்த அனுமதி வழங்ககோரியும் அவரது தண்டனை காலம் முடிந்துள்ளதால் விடுதலை செய்யக்கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஏ.அசோகன், பி.முத்துகுமார், மூர்த்திராவ் ஆகியோர் கடந்த செப்டம்பர் 8ம் தேதி சிறப்பு மனு தாக்கல் செய்தனர். அம்மனுவை நீதிபதி சிவப்பா விசாரித்தார். அப்போது, சுதாகரன் வக்கீல்கள் ஆஜராகி, ‘ சுதாகரனுக்கு நீதிமன்றம் விதித்த அபராத தொகையை செலுத்த அனுமதி வழங்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையின்போது 1997ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையில், பல்வேறு காலக்கட்டங்களில் சுதாகரன் 122 நாட்கள் சிறை வாசம் அனுபவித்துள்ளார்.
இதை கணக்கிட்டால், அவரின் 4 ஆண்டு தண்டனை காலம் ஒருமாதத்திற்கு முன் முடிந்துள்ளதால், அவரை விடுதலை செய்ய வேண்டும்,’ என்று வலியுறுத்தினர். இந்நிலையில்,இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி சிவப்பா வழங்கிய தீர்ப்பில், ‘‘இதே வழக்கில் ஏற்கனவே சுதாகரன் தண்டனை சிறை தண்டனை அனுபவித்துள்ளது உறுதியாகிறது. ஆகவே, தண்டனை காலம் முடிந்த அவரை, அபராத தொகையான ரூ.10 கோடியே 10 ஆயிரத்தை செலுத்தியதும் விடுதலை செய்ய வேண்டும்,’’ என்று அறிவித்தார்.
* சசிகலாவும் விடுதலை?
இதே வழக்கில், சசிகலாவும் வழக்கு விசாரணை காலங்களில் 42 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். அந்த நாட்கள் கழிக்கப்பட்டு, அவரும் முன்கூட்டியே விடுதலையாகும் வாய்ப்பு இருப்பதாக அவருடைய வக்கீல்கள் தெரிவித்தனர்.