×

சிஎம்எஸ் 01 செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!!

ஸ்ரீஹரிகோட்டா,:இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடையுடைய சிஎம்எஸ் 01 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.  இந்த செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து, 6 உந்து விசை சக்தியுடன் உருவாக்கப்பட்டுள்ள பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இதில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டுள்ளன. இது இந்தியாவின் 52வது பிஎஸ்எல்வி ராக்கெட். இதற்கான இறுதிக்கட்ட பணியான 25 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று பகல் 2.41 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் 25 மணி நேர கவுன்ட்டவுனை முடித்து கொண்டு திட்டமிட்டபடி இன்று மாலை 3.41 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, சி-பாண்டு ஆகிய பணிகளுக்கு தேவையான தரவுகளை பெறுவதற்காக இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் பெறப்படும் அலைவரிசை, இந்தியாவிலும், அந்தமான் - நிகோபர், லட்ச தீவுகளில் பயன்படுத்த முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரலையில் ராக்கெட் செலுத்தப்படுவதை காணலாம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்நிகழ்வை நேரடியாக காண அனுமதியில்லை.



Tags : C-50 ,PSLV ,CMS , CMS01, satellite, PSLV C-50, rocket, successfully
× RELATED உலகிலேயே இதுவரை இல்லாத அளவு 2024 மக்களவை...