×

நடிகர் கமல் நாட்டை ஆள நினைத்தால் ஓரு குடும்பம் கூட உருப்படாது; படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் குடும்பங்களை கமல் சீரழிக்கிறார்: முதல்வர் பழனிசாமி பேட்டி

அரியலூர்: கமல் நாட்டை ஆள நினைத்தால் ஓரு குடும்பம் கூட உருப்படாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாடியுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி முடிவுற்ற பணிகளை துவங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 36 கோடியே 73 லட்ச ரூபாய் மதிப்பிலான நிறைவடைந்த 39 பணிகளை துவங்கி வைத்தார். 26 கோடியே 52 லட்சம் மதிப்பிலான 14 புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, 129 கோடி மதிப்பில் 21 ஆயிரத்து 504 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அரியலூர் மாவட்டத்தில் 6,300 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றியதால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

வெளியூரில் இருந்து வந்தவர்களை மாவட்ட நிர்வாகம் முறையாக கண்டறிந்து பரிசோதித்ததால் பாதிப்பு குறைந்துள்ளது. கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் கையிருப்பில் உள்ளன. தவறு நடந்தால் தடுக்க வேண்டும் என்ற அடிப்படியில் அரசு செயல்படுகிறது. குடிமராமத்து பணிகளால் பருவமழையால் கிடைத்த நீரை அதிகளவில் சேமிக்க முடிந்தது. இந்தியாவிலேயே பயிர் காப்பீட்டில் அதிக இழப்பீட்டு தொகை பெற்றுதந்த அரசு தமிழக அரசு தான்.

விவசாயிகளின் பிள்ளைகள் தரமான கல்வியை பெற அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. அரசு வழங்கிய விதிமுறைகளை பின்பற்றாததால் தான் சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று பரவியது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் எளிதாக கொண்டு சேர்க்கவே மினி கிளினிக் என ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ராஜராஜசோழனுக்கு மணிமண்டபம் கட்டுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

எங்கெல்லாம் நீர் சேமிக்க முடியுமோ, அங்கெல்லாம் நீர் சேமிக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது என கூறினார். மேலும் பேசிய அவர்; கமல் நாட்டை ஆள நினைத்தால் ஓரு குடும்பம் கூட உருப்படாது. கமல்ஹாசன் தனது படங்கள், பாடல்கள் மூலம் நாட்டுக்கு சொல்ல வரும் கருத்து என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.


Tags : Kamal ,country ,Palanisamy ,families ,interview , If actor Kamal wants to rule the country, not even a single family will be formed;
× RELATED உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக...