×

குற்றால அருவிகளில் 265 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

தென்காசி: குற்றால அருவிகளில் 265 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் நேற்று காலை முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குவியத் துவங்கிய ஏராளமானோர் ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கொரோனா பரவலின் வேகம் குறையத் துவங்கியதை அடுத்து தமிழக அரசு பல கட்டங்களாக தளர்வுகளை அறிவித்து வந்தது. நேற்று முன்தினம் மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் குற்றாலத்தில் ஒரு நாள் தாமதமாக நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை குற்றாலம் பேரூராட்சி நிர்வாக அதிகாரி வீரபாண்டியன், இன்ஸ்பெக்டர் சுரேஷ், மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிரமாக மேற்கொண்டனர்.

இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குவியத் துவங்கிய சுற்றுலா பயணிகள் அனைவரும் நேற்று காலை முதலே அருவியில் குளிக்க நீண்ட வரிசையில் நின்றனர். அருவியில் குளிக்க வந்திருந்தவர்களிடம் பேரூராட்சி பணியாளர்கள் முகவரி, தொலைபேசி எண்களை பெற்று பதிவு செய்து கொண்ட பிறகே குளிக்க அனுமதித்தனர். அத்துடன் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டனர். கைகளில் சானிடைசர் தெளித்து அனுப்பினர்.

சுற்றுலா பயணிகள் காத்திருப்பதற்தாக சமூக இடைவெளி கட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தது. அருவியை சுற்றி பல பகுதிகளிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு இருந்தது. அருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் குறித்த முழு விவரங்களை அறிந்து கொள்வதற்காக சன்னதி பஜாரிலிருந்து அருவிக்கு வரும் பாதைகள் அடைக்கப்பட்டு  வரவேற்பு வளைவு பாதை வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 10 வயதுக்கு உட்பட்டோரை குளிக்க அனுமதிக்கவில்லை. இதனால் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் உள்ளிட்டோருக்கு அருவியில் இருந்து பிடித்து வந்த தண்ணீரை பெற்றோரும், உறவினர்களும் தலையில் தீர்த்தம் போல் தெளித்தனர்.

மெயின் அருவியைப் பொருத்தவரை நேற்று தண்ணீர் சுமாராகவே விழுந்தது. 265 தினங்களுக்கு பின்னர் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட திரளானோர் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.

Tags : Courtallam Falls , Courtallam Falls
× RELATED 8 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல்...