புதுடெல்லி: ரேஷன் கடை உரிமையாளர்களுக்கு ஏப்ரல் மாதம் தொடங்கி மானியத்தொகை வழங்காதது ஏன் என விளக்கம் அளிக்கும்படி ஆம் ஆத்மி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நுகர்வோர் பொருட்களை மக்களுக்கு விநியோகம் ரேஷன் கடைகளை பலரும் அரசிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் எடுத்து நடத்தி வருகின்றனர். ரேஷன் கடைகளை ஒரேயடியாக இழுத்து மூடும் நோக்கத்துடன் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் அரசின் திட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள ரேஷன் கடை விநியோகஸ்தர்கள், பிரதம மந்திரி கரீப் கல்யாண் திட்டம் மற்றும் முதலமைச்சர் கொரோனா சஹாய்தா திட்டங்களில் மக்களுக்கு பல்வேறு உணவுப் பொருட்களை விநியோகம் செய்ததற்காக மாணியத் தொகையை கடந்த 8 மாதமாக ஆம் ஆத்மி அரசு நிறுத்தி உள்ளது என உயர் நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை நீதிபதி நவீன் சாவ்லா நேற்று விசாரணைக்கு ஏற்றார். அப்போது நீதிபதியிடம் டெல்லி ரேஷன் கடை டீலர்கள் சங்கத்தினர் மற்றும் நியாயவிலைக் கடை டீலர்கள் சங்கத்தினர் என மனுதாரர் தரப்பு கூறுகையில், ‘‘உரிய காலத்தில் மானியத்தை வழங்காததால், ரேஷன் கடை வாடகையைக் கூட செலுத்த முடியாமல் அவதிப்படுகிறோம்’’, என கண்ணீர் வடித்தனர். பதிலளித்து அரசு தரப்பின் நிலைக்குழு ஆலோசகர் அனுஜ் அகர்வால் கூறுகையில், ‘‘ நிதி நெருக்கடியில் அரசு தள்ளாடுகிறது. எனவே மானியத்தை வழங்க முடியவில்லை. மொத்தமாக வழங்காமல் ஜனவரி மத்தியில் ஓரளவுக்கு ரேஷன் கடை உரிமையாளர்களுக்கு மானியம் வழங்க அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது’’, என்றார். அதுவரை மனுதாரர்கள் பட்டிய இருப்பார்களா என அரசு ஆலோசகரைச் சாடிய நீதிபதி, பிப்ரவரி 16ல் நடைபெறும் விசாரணைக்கு முன் உரிய விளக்கத்தை சமர்ப்பிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என உத்தரவிட்டார்.