கூடுவாஞ்சேரி: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இணையும் கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையோரத்தில் நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதையொட்டி சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆன்லைனில் பத்திரப்பதிவு வந்தபோதிலும் பட்டா, சிட்டா, அடங்கல், பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் வாங்குவதற்கு லஞ்சம் வாங்குவதாகவும், நில புரோக்கர்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி நேற்று மாலை 5 மணி அளவில் கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து லஞ்ச ஒழிப்பு துறை மாவட்ட டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சில மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 92 ஆயிரத்து 950 ரூபாய்க்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களிடமும், நிலபுரோக்கர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி நடத்தினர். இந்த சம்பவத்தால் கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.