டெல்லி: தொழிலதிபர்கள் அம்பானியும் அதானியும் கடந்த சில மாதங்களில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வேளாண் நிறுவனங்களை பதிவு செய்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி.ஒருவர் ஜே.எஸ்.கில் குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 20ம் நாளை எட்டியுள்ளது. போராடும் விவசாயிகளுக்கு ஆதாரவாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஜே.எஸ்.கில் ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்களுக்கே சாதகமானது என அவர் குற்றம் சாட்டினார்.கடந்த 4 மாதங்களில் மட்டும் அம்பானியும் அதானியும் வேளாண் சார்ந்த 53 நிறுவனங்களை பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.மேலும் இது அரசின் உதவியின்றி சாத்தியமே கிடையாது என்றும் அல்லது இப்படியான வேளாண் சட்டங்கள் வருமென அவர்கள் கனவு கண்டார்களா எனவும் கேள்வி எழுப்பினார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே மத்திய அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளதாகவும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் ஜே.எஸ்.கில் கூறினார்.