சென்னை: நடிகர் ரஜினி ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. 234 தொகுதிகளிலும் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. ரஜினி கேட்ட பாபா முத்திரை சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை டுவிட்டர் வழியே உறுதிப்படுத்தினார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற ஹேஷ்டாக்குகளும் இடம் பெற்று இருந்தன. இதுபற்றி அவரது டுவிட்டரில் வெளியிடப்பட்ட மற்றொரு செய்தியில், வர போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்!!! என்றும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ரஜினிகாந்த் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனுக்கு ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் பதவியும், அர்ஜூன மூர்த்திக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கட்சி தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 234 தொகுதிகளிலும் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் சேவை கட்சி தலைவரின் முகவரி ஆணைய பதிவேட்டில் சென்னை எர்ணாவூர் என உள்ளது. ரஜினி பாபா முத்திரை சின்னத்தை ஒதுக்க தலைமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.