சித்ரதுர்கா: நாட்டில் முதல் கட்டமாக 30 கோடி பேருக்கு வரும் 2021 ஜூலை இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மாநில சமூகநலத்துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலு தெரிவித்தார். இது குறித்து சித்ரதுர்காவில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில் உலகளவில் தடுப்பூசி கண்டுப்பிடிக்கும் முயற்சி ேமற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சில ஆராய்ச்சி மையங்கள் கண்டுப்பிடித்துள்ள தடுப்பூசிகள் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்த பாதிப்பும் வரவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வரும் 2021ம் ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய சுகாதார துறை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக கொரோனா முன்கள வீரர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அதன்படி வரும் 2021 ஜூலை இறுதிக்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் படிப்படியாக அனைவருக்கும் போடப்படும் என்றார்.