×

உணவு கொடுத்து உதவுபவர்களை தேச விரோதிகள், தீவிரவாதிகள் என்று அழைப்பது நமது கலாச்சாரம் அல்ல : மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே தாக்கு!!

மும்பை : உணவு கொடுத்து உதவுபவர்களை தேச விரோதிகள், தீவிரவாதிகள் என்று அழைப்பது நமது கலாச்சாரம் அல்ல என்று மராட்டிய உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். 3 சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். ஆனால், சட்டத்தை ரத்து செய்ய விரும்பாத மத்திய அரசு, திருத்தங்கள் செய்வதாக உறுதி அளிக்கிறது. இதனால், இருதரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில்,  விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இன்று 19வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. டெல்லி போராட்ட களத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்க தலைவர்கள் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே அளித்த பேட்டி வருமாறு: உணவு கொடுத்து உதவுபவர்களை தேச விரோதிகள், தீவிரவாதிகள் என்று அழைப்பது நமது கலாச்சாரம் அல்ல. நமது விவசாயிகள் இரவு பகலாக குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகிறார்கள். அவர்களுக்கு அநீதி இழைத்து வருகிறோம் என்பதை பாஜகவினர் புரிந்து கொள்ள வேண்டும்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு பாஜக தலைவர்கள் ஆதரவு அளித்திருக்க வேண்டும். ஆனால் மாறாக  விவசாயிகளை பாகிஸ்தானியர்கள், தேச துரோகிகள் என ஒவ்வொருவரும் சொல்கிறார்கள். விவசாயிகள் யார்? நக்சல்களா, பாகிஸ்தானியா அல்லது சீனாவில் இருந்து வந்தவர்களா? என ஏதாவது ஒன்றை முடிவு பண்ணி சொல்ல வேண்டும்  பாகிஸ்தானில் இருந்து சர்க்கரையும், வெங்காயமும் வாங்கியவர்கள்தான் பாஜக ஆட்சியாளர்கள். இப்போது விவசாயிகளையும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்கிறார்களா ? யாராவது தொழிலாளர்களுக்காகவோ, விவசாயிகளுக்காகவோ பரிந்து பேசி விட்டால் போதும், அவர்களையும் தேசவிரோதி என்கிறார்கள். வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்றால், அதை போராடுபவர்களிடம் நேரில் சென்று விளக்கி புரிய வைக்கலாமே! அதை விட்டுவிட்டு, பாஜக அமைச்சர்கள் கேமரா முன்னால் வீண்ஜம்பம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்? இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். .


Tags : Uttam Thackeray ,extremists ,Maratha , Food, Culture, Marathas, Chief Minister, Uttam Thackeray, Attack
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...