வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமாகலிங்கம் கோயிலுக்கு செல்லும் வழியிலுள்ள ஓடைகளில் பாலம் கட்ட கோயில் நிர்வாகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு 1 நாள் என பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். புயல் மழை, தொடர் மழை பெய்தால், விசேஷ நாட்களுக்கு கூட பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் சதுரகிரியில் மழை பெய்தால் கருப்பசாமி கோயில் ஓடை, சங்கிலிப்பாறை ஓடை, எலும்பு ஓடை, மாங்கனி ஓடை, தாணிப்பாறையிலிருந்து வனத்துறை கேட் பகுதிக்கு செல்லக்கூடிய ஓடை உள்ளிட்ட ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும்.
இதனால் தொலைதூர ஊர்களிலிருந்து வருகை தந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி செல்ல வேண்டிய நிலை உள்ளது. கோயிலுக்கு செல்லும் வழியிலுள்ள ஓடைகளில் பாலம் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கோயிலுக்கு வழியிலுள்ள மாங்கனி ஓடை உள்ளிட்ட ஓடைகளில் பாலம் கட்ட கோயில் பரம்பரை அறங்காவலர் ராஜா என பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பக்தர்களின் நலன்கருதி பாலம் கட்ட வனத்துறையினர் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.