ஆரணி: ஆரணி அடுத்த அடையபுலம் பெரிய ஏரி நேற்று நிரம்பியது. இதையொட்டி, அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மலர்தூவி வரவேற்றார். ஆரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிவர் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால், கிணறு மற்றும் ஏரிகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில், ஆரணி அடுத்த அடையபுலத்தில் உள்ள பெரிய ஏரிக்கு குன்னத்தூரில் உள்ள கமண்டல நதியிலிருந்து தண்ணீர் வந்தது. இதனால் நேற்று ஏரி முழுவதும் நிரம்பி கோடி போனது.
இந்நிலையில், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஏரிக்கு சென்று உபரிநீர் வெளியேறும் இடத்தை பார்வையிட்டு பூஜை செய்து மலர் தூவினார். தொடர்ந்து, ஆரணி தொகுதியில் உள்ள 311 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தல் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதனை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பார்வையிட்டார். அப்போது, தாசில்தார் செந்தில்குமார், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் சேகர், கஜேந்திரன், வக்கீல் சங்கர், திருமால், அம்மா பேரவை செயலாளர் பாரிபாபு, நகர செயலாளர் அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.