சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழி திருவிழாவை பாரம்பரிய முறைப்படி நடத்த அனுமதிக்கும்படி பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக மனுக்களும் அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி திருவிழாவை நடத்த கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். இதற்கான ஆணையை மாவட்ட நிர்வாகம் கோயில் இணை ஆணையர் அன்புமணிக்கு அனுப்பியுள்ளது. இதனையடுத்து வருகிற 21ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொங்கி 10 நாட்கள் விழா நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 9ம் நாளான 29ம் தேதி தேரோட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் திருக்கண் சார்த்து நிகழ்வு தவிர பாரம்பரிய முறையிலான நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெறும்.