அறந்தாங்கி: அறந்தாங்கியில், பட்டுக்கோட்டை சாலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள கிராவல் மண் குவியலால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, திருவாரூர், பட்டுக்கோட்டை, கீரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக பட்டுக்கோட்டை சாலை விளங்குகிறது. இந்த சாலை வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையின் ஓரம் பல லோடு கிராவல் மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மணல் தனிநபர்களால் சாலையோரம் குவித்த வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு சாலை ஓரம் குவித்து வைக்கப்பட்டுள்ள கிராவல் மண்ணால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் ஒதுங்கி வழி கொடுக்க இடம் இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு சில நேரங்களில் வாகனங்களுக்கு வழி விடுவதற்காக ஒதுங்கும்போது, கிராவல் மண் குவியலில் மோதி கீழே விழும்நிலை உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியது: அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலை போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாகும். இந்த சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையான அக்ரஹாரம் சாலை உள்ளது. இந்த பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைக்கு வந்து செல்வோர் தங்கள் வாகனங்களை சாலை ஓரம் உள்ள இடங்களில் நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். அதுபோல வாகனங்கள் நிறுத்தி செல்லும் இடத்தில் தனியார் ஒருவர் பல லோடுகள் கிராவல் மண் அடித்து வைத்துள்ளார். இவ்வாறு சாலை ஓரம் கிராவல் மண் குவியல் இருப்பதால், மருத்துவமனைகளுக்கு வரும் வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்த வேண்டி உள்ளது.
மேலும் கிராவல் குவியலால் அப்பகுதியில் வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் தனியார் தன்னிச்சையாக பல வாரங்களாக கிராவல் மண் கொட்டி வைத்திருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பலமுறை நெடுஞ்சாலைத்துறையினரிடம் கூறியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று கூறினார். அறந்தாங்கி நகரில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையின் ஓரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் குவித்து வைக்கப்பட்டுள்ள கிராவல் மண் குவியலை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி பறிமுதல் செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.