சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நேர்மையானவர் என சூரப்பா மீதான புகாரை விசாரிக்கும் குழுவுக்கு ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல், இடைத்தரகர் தலையீட்டை முடிவுக்கு கொண்டு வந்தவர் சூரப்பா என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான 280 கோடி ரூபாய் முறைகேடு குறித்து விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. 3 மாதத்தில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டது. இந்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு தேவையான ஆவணங்களை கடந்த 2 நாட்களாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி நேரில் சென்று ஒப்படைத்து வருகிறார்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நேர்மையானவர் என (AUTA ) கலையரசனுக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. அதில் அண்ணா பல்கலையில் அரசியல், இடைத்தரகர் தலையீட்டை முடிவுக்கு கொண்டு வந்தவர் சூரப்பா. ஊழலற்ற பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகத்தை மாற்றியவர் தான் சூரப்பா. துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் யாரும் இல்லை. உண்மையில் ஊழல் என்று நடைபெற்றது என்று உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கடிதம் அனுப்பி உள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் சரியான திசையில் பயணிக்கிறது. துணை வேந்தர் சூரப்பா மீது முழு நம்பிக்கை உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.