ஒரத்தநாடு: ஓடையில் பாலம் இல்லாததால் இறந்தவர் சடலத்தை இடுப்பளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் உள்ள யாதவர் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் இறந்தால் அவர்களது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்வதற்கு பாப்பனோடையை கடந்து கொண்டு செல்ல வேண்டும். கோடை காலத்தில் தண்ணீர் இல்லாதபோது ஓடைக்குள் இறங்கி சடலத்தை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று விடுவர்.
மழை காலங்களில் ஓடையில் உள்ள இடுப்பளவு தண்ணீரில் தான் சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். மயானத்துக்கு செல்ல ஓடையில் பாலம் அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாப்பனோடையில் இடுப்பளவு உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. தற்போது பெய்த மழையால், ஏரியில் தண்ணீர் அதிகளவில் உள்ளது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த சாமியப்பன் (70) என்பவர் வயது முதிர்ச்சி காரணமாக இறந்தார். இதையடுத்து நேற்று மதியம் ஓடையில் இடுப்பளவு தண்ணீரில் அவரது சடலத்தை மயானத்துக்குள் பெரும் சிரமத்துடன் மக்கள் தூக்கி சென்றனர்.