×

நண்பன் கொலைக்கு பழி வாங்க திட்டம் தீட்டிய புழல் சிறை வார்டன் உள்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை: ரவுடி கும்பல் வெறிச்செயல்

வேலூர்: நண்பன் கொலைக்கு பழி வாங்க திட்டம் தீட்டிய புழல் சிறை வார்டன் உள்பட 3 பேர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கொண்ட ரவுடி கும்பலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் அசோக்(26). இவர் கடந்த ஏப்ரல் மாதம் அரியூரில் கள்ளச்சாராயம் குடிக்கச்சென்றார். அப்போது, இவருக்கும் பிரபல ரவுடியான எம்எல்ஏ ராஜா கும்பலை சேர்ந்த 7 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அசோக்கை, ரவுடி கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டது.

இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையான அசோக்கின் நண்பர்கள் அரியூரை சேர்ந்த காமேஷ்(26), வேலு (எ) தணிகைவேலு(26), அரியூர் அடுத்த முருக்கேரியை சேர்ந்த திவாகர்(25). இவர்களில் வேலு(என்ற) தணிகைவேலு சென்னை புழல் சிறையில் வார்டனாக பணியாற்றி வந்தார். நண்பர் அசோக்கை கொலை செய்தவர்களை பழிவாங்க காமேஷ் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அசோக் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி எம்எல்ஏ ராஜா கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தன்னை கொலை செய்ய காமேஷ் திட்டம் தீட்டியது ராஜாவுக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, எம்எல்ஏ ராஜா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காமேஷ், திவாகர், தணிகைவேலு ஆகிய 3 பேரையும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அணைக்கட்டு அடுத்த புலிமேடு பகுதியில் தணிகைவேலு, திவாகர் ஆகியோர் மது அருந்திக் கொண்டிருப்பதாக ராஜாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையறிந்த ராஜா தனது கூட்டளிகளான உமாமகேஸ்வரன், லோகேஷ், ஆனந்த், ரோகித்குமார், சுனில், சேம்பர் ராஜா ஆகியோருடன் அங்கு விரைந்து சென்றார். அப்போது குடிபோதையில் இருந்த சிறை வார்டன் தணிகைவேலு, திவாகர் ஆகியோரை திடீரென சுற்றிவளைத்து கழுத்தில் துண்டை சுற்றி சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் அங்கிருந்து தப்ப முயன்றனர். இருப்பினும் இருவரையும் கழுத்து, தோள்பட்டை ஆகிய இடங்களில் கொடூரமான முறையில் வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர்கள் 2 பேரும் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து ரவுடி எம்எல்ஏ ராஜா கும்பல் உள்பட 7 பேரும் காரில் தப்பி அரியூர் நோக்கி சென்றனர்.

அப்போது வழியில் அரியூர் அடுத்த ராஜாபாளையம் பகுதியில் அசோக்கின் மற்றொரு நண்பரான காமேஷ் நின்றுக் கொண்டிருந்ததை பார்த்த எம்எல்ஏ ராஜா கும்பல் அவரையும்  சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து காமேஷ் தப்பியோட முயன்றார். ஆனால் விடாமல் அவரை ஓட, ஓட விரட்டி வெட்டி சாய்த்து விட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த டிஐஜி காமினி, எஸ்பி செல்வகுமார் மற்றும் ஏஎஸ்பி ஆல்பர்ட்ஜான், இன்ஸ்பெக்டர் சுபா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, 3 சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், சிறை வார்டன் உள்ளிட்ட 3 பேர் வெட்டிக் கொலை செய்த எம்எல்ஏ ராஜா உட்பட அவரது கூட்டாளிகள் 7 பேரும் பாகாயம் வழியாக நேற்று அதிகாலை காரில் தப்ப முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை வருகின்றனர். வேலூர் அருகே ஒரேநாள் இரவில் அடுத்தடுத்து சிறை வார்டன் உட்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் பொதுமக்களிடையே பெரும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : murder ,prison warden ,Rowdy , Rowdy gang rapes 3, including prison warden, who planned to avenge the murder of a friend
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...