×

ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி: மத்திய அரசின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்கில மருத்துவர்கள் போராட்டம்.!!

ஈரோடு: ஆயுர்வேதம், சித்தமருத்துவம் படித்த மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆங்கில மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவ தொழிலில் கலப்படம் செய்யப்பட்டால் வெளிநாடுகளில் இந்திய மருத்துவ படிப்புகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆங்கில மருத்துவர் ஒருவர் தெரிவித்ததாவது, இந்திய நாட்டில் பாரம்பரியமிக்க மருத்துவத்துறையில் ஆயுர்வேதமும், சித்தமருத்துவமும் ஒன்று. ஆனால் ஆயுர்வேத மருத்துவர்கள் திடீரென அலோபதி மருத்துவத்துறையில் நுழைந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டால் அது பொதுமக்களுக்கு பெறும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டார்.

ஈரோட்டில் அரசு மருத்துவக் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் முடிவால் நோயாளிகள் பாதிக்கப்படுவதுடன் மருத்துவத்துறையின் தனித்துவமும் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். போராட்டம் குறித்து இந்திய மருத்துவ சங்கம் சி.என்.ராஜா தெரிவித்ததாவது, ஒரு மருத்துவத்தோடு மற்றொரு மருத்துவத்தை கலக்கும் போது மக்களுக்கு பலவித பாதிப்புகள் ஏற்படும். அவர்கள் உயிரை பணயம் வைக்கும் மிக மோசமான விளைவுகள் ஏற்படும். அதுமட்டுமின்றி அந்தந்த மருத்துவத்துறையின் தனித்துவம் முழுவதுமாக அழிக்கப்படும்.

இதனை கண்டித்து தான் தற்போது போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. வருகின்ற 11ம் தேதி நாடு முழுவதும் தனியார் மருத்துவர்கள் அவசர சிகிச்சை தவிர மற்ற அனைத்து சிகிச்சைகளையும் நிறுத்தி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம். மக்களின் விழிப்புணர்விற்காகவே இப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். மத்திய அரசின் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இதேபோன்று தாம்பரம், திருவள்ளூர், திண்டுக்கல், மதுரை, பல்லடம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 


Tags : doctors ,surgeries , Ayurvedic medicine, surgery, English doctors, struggle
× RELATED நாகர்கோவில் அருகே லெமூர் பீச்சில்...