ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மணமகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதுகாப்பு உடை அணிந்து ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டது. ராஜஸ்தான் மாநிலம் ஷாபாத் நகரில் பரா பகுதியில் ஒரு ஜோடிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதற்கு முன், மணமக்களுக்கு கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், மணமகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனினும், குறிப்பிட்ட நேரத்தில் திருமணம் செய்து கொள்வதில் இருவரும் உறுதியாக இருந்தனர்.
தொடர்ந்து மணமக்கள் இருவரும் கொரோனா தடுப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டனர். பின்பு இருவரும் சடங்குகளை முறையாக பின்பற்றி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நபரும், தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டார். நிகழ்ச்சியில் மணமகன் பாரம்பரிய தலைப்பாகை மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டார். இதேபோன்று மணமகளும், முகக் கவசம் மற்றும் கையுறைகளை அணிந்தபடி காணப்பட்டார். கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து நடத்தப்பட்ட இந்த திருமணம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது.