டெல்லி: தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் பயன்படுத்த அவசர அனுமதி வழங்க வேண்டும் என்று ஃபைசர் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 8 மாதத்துக்கும் மேலாக கொரோனா நோய் தொற்று பொதுமக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு வருகிறது.
நாள்தோறும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகிறது. கொரோனா நோய்க்கு எதிராக சரியான தடுப்பு மருந்து இல்லாததால் நோய் தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியாமல் சர்வதேச நாடுகள் அவதிக்குள்ளாகி வருகின்றன. கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் 3 கொரோனா தடுப்பு மருந்துகள் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது.
இதற்கிடையே, அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனாவுக்கு எதிரான ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசி 95 சதவீதம் பயன் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஃபைசர் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு முதல் நாடாக இங்கிலாந்து அரசு அனுமதி அளித்தது. ஃபைசர் நிறுவனத்தின் மருந்தை முதற்கட்டமாக 2 கோடி பேருக்கு அடுத்த வாரம் முதல் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, 2-வது நாடாக பக்ரைன் அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து, பக்ரைன் நாடுகள் அனுமதி அளித்த நிலையில், கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் பயன்படுத்த அவசர அனுமதி வழங்க வேண்டும் என்று ஃபைசர் நிறுவனம் இந்திய மருத்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே, இந்த மருந்தை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன் பதிவு செய்துள்ளன. இந்த தடுப்பு மருந்து ஒருவருக்கு இரண்டு டோஸ்கள் செலுத்தப்படும். அடுத்த ஆண்டு 1,300 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்று ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.