ஈரோடு: புரெவி புயல் எதிரொலியால் ஈரோடு மாட்டு சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது. வியாபாரிகள் வருகையும் குறைந்ததால், விற்பனையும் மந்தமானது. ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி செக்போஸ்ட் அருகே வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று மாட்டுச்சந்தை கூடும். இந்த சந்தைக்கு ஈரோடு மற்றும் இதர மாவட்டங்களில் இருந்து மாடுகள் வரத்தாகும். மாடுகளை வாங்க கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து மாடுகளை வாங்கி செல்வது வழக்கம். கடந்த வாரம் நிவர் புயல் மழை காரணமாக மாடுகள் வரத்து குறைந்தது.
இந்நிலையில், புரவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்காரணமாக இன்று கூடிய சந்தையில் பசு-450, எருமை-200, கன்று-50 என மொத்தம் 700 மாடுகள் வரத்தானது. மாடுகள் வரத்து மற்றும் வெளிமாநில வியாபாரிகள் வரத்தும் குறைந்ததால் இந்த வாரம் விற்பனை மந்தமாக நடந்தது.