நொய்டா: கவுதம் புத்தா நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோனு(32). ராகுல், ரோகித் என்றும் அறியப்பட்டவர். இவர் மீது டெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் கவுதம் புத்தா நகர் மாவட்டத்திலும் 36க்கும் அதிக கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதுபோல அன்னு என்கிற அனில் என்பவர் மீதும் 20க்கும் அதிக நிலுவை வழக்கு உள்ளது. நொய்டாவின் அடோப் ரவுன்டானா அருகே மோட்டார்பைக்கில் நேற்று காலை 7.20 மணிக்கு சென்ற இருவரையும் போலீசார் தடுத்தனர். எனினும், போலீசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு இருவரும் பைக்கில் விரைந்தனர். சட்டம், ஒழுங்கு துணை கமிஷனர் அஷுதோஸ் த்விவேதி தலைமையில் வாகனத்தில் போலீசார் விரட்டிச் சென்று முழங்காலுக்கு கீழே அவர்களை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தி மடக்கிப் பிடித்தனர்.