குடகு: குடகு மாவட்டம் சோமவாரபேட்டை தாலுகா 7-வது ஹொசகோட்டை கிராமத்துக்குள் வனவிலங்குகள் புகுந்து விளைபயிர்களை நாசம் செய்து வந்தது. இதில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களின் காபி தோட்டங்களில் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க மின்வேலி அமைத்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று மதியம் வனப்பகுதியிலிருந்து வந்த 13 வயது மதிக்கதக்க ஆண் காட்டு யானை காபி தோட்டத்துக்குள் நுழைய முயற்சித்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இதை கவனித்த கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆர்.எப்.ஓ. அனில்டிசோசா ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வனப்பகுதிக்குள் யானையை புதைத்தனர். இது குறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில்: தோட்டத்தில் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க விவசாயிகள் மின்வேலி அமைத்துள்ளனர். இரைதேடி வந்த நேரத்தில் யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது. யானை இறந்து இரண்டு நாட்கள் கடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.