சென்னை: டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் வருகிற 28-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் சூழலில் அடுத்தகட்ட தளர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வாய்ப்பு உள்ளது. கொரோனா ஊரடங்கில் ஏற்கனவே பல்வேறு தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் 1,500 என்ற சராசரியில் நாளொன்றுக்கான பாதிப்பு இருந்து வருகிறது.
இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 10வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்புகளை பொறுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற நவம்பர் 28 ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் வருகிற நவம்பர் 30 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், பொதுமுடக்கம் நீட்டிப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் டிசம்பர் மாதத்தில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு ஏற்பவே தமிழகத்தில் பொதுமுடக்க கட்டுப்பாடுகள், தளர்வுகள் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.