சென்னை: கன்னியாகுமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சியால் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. தமிழகத்தின் தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் இதர மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.
சென்னை நகர், புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு லேசான மழையே பெய்யும் எனவும் தகவல் கூறியுள்ளது. 45-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் 2 நாட்களுக்கு குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு, அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு. விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறினார்.
அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு குறைந்துள்ளதாக கூறினார். தஞ்வாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் காலை முதல் மழை பெய்து வருகிறது. அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, மழவேனிற்காடு, உள்ளூர் புதுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் அரை மணி நேரமாக மழை பெய்து வருகிறது. அதே போல் மதுரை மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது.