×

எதார்த்த அணுகு முறையின்படி தொகுதி பங்கீடு செய்து கொள்வோம்; மற்ற விசயங்களைவிடக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம்: தினேஷ் குண்டு ராவ் பேட்டி

* தேவையற்ற பேரங்கள் இருக்காது
* கடும் போட்டி நிலவும் 100 தொகுதிகளில் திமுகவுக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம்
* எதார்த்த அணுகு முறையின்படி தொகுதிப் பங்கீடு நடக்கும்

டெல்லி: எதார்த்த அணுகு முறையின்படி தொகுதி பங்கீடு செய்து கொள்வோம் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதைக் கண்டறிந்து வருவதாகவும், பேரம் பேச மாட்டோம் எனவும், அகில இந்திய காங்கிரஸின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்துக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளைக் கட்சி தொடங்கியுள்ளது என கூறினார். வலுவான மற்றும் நல்ல வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆலோசனையும் தொடங்கியிருக்கிறது என தெரிவித்தார். நாங்கள் அதை முக்கியமான, நடைமுறை கோணத்தில் பார்க்கிறோம். தொகுதிவாரியாக உள்ள எதார்த்தங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மற்ற விசயங்களைவிடக் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம் என கூறினார்.

பீகார் தேர்தல் முடிவுகள் எங்களைப் பாதிக்காது எனவும், தமிழகத்தின் அரசியல் களம் வேறு என. திமுகவுடனான எங்கள் கூட்டணி ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில்  கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதைப் போல் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலிலும் இணைந்து போட்டியிடுவோம் என பேட்டியளித்தார். பீகாரில் மக்களவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி தோல்வியடைந்தது. ஆனால், தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது என தெரிவித்தார். களத்தில் சிறப்பாகப் பணியாற்றியதோடு, மக்களின் ஏகோபித்த ஆதரவையும் எங்கள் கூட்டணி பெற்றது என கூறினார். அதேபோன்ற மக்கள் ஆதரவு இனியும் தொடரும் என தெரிவித்தார்.

வாக்கு வித்தியாசம் குறையும் போது திமுக மற்றும் தோழமை கட்சிகளுக்கு வலுவூட்டக் காங்கிரஸ் கட்சியால் முடியும் என தெரிவித்தார். கடும் போட்டி நிலவும் 100 தொகுதிகளில் திமுகவுக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம் என உறுதியளித்தார். எதார்த்த அணுகு முறையின்படி தொகுதிப் பங்கீடு நடக்கும். நேர்மையான மற்றும் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் தோழமைக் கட்சிகளை சமாதானப்படுத்த முயல்வோம் என கூறினார். தேவையற்ற பேரங்கள் இருக்காது என தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழக முதலமைச்சராக அமர வைக்கக் காங்கிரஸ் பணியாற்றும் என கூறினார். தமிழகத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது என தினேஷ் குண்டு ராவ் தெரிவித்தார்.

Tags : interview ,coalition ,Dinesh Kundu Rao , Realistic approach, volume, distribution, Dinesh Kundu Rao
× RELATED 100க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி...