சென்னை: கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. பெரும்பாலானோர் இதை சரியாக பின்பற்றுவதில்லை. குறிப்பாக சார் பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் பதிவுத் துறை அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
அதில், சார்பதிவாளர் அலுவலகங்களில் கோவிட்-19க்கு எதிராக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அலுவலகத்திற்குள் நுழையும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் சரியாக அணிவதை உறுதிசெய்து கொள்ளுங்கள். அவர்களில் பெரும்பாலோனோர் மூக்குக்கு பதிலாக முகக்கவசத்தால் கன்னங்களை தான் மறைக்கிறார்கள். சிலர் மூக்கு, வாய் ஆகிய இரண்டையும் மறைப்பதில்லை. அவ்வாறு வரும் பொதுமக்களை அனுமதிக்க வேண்டாம். மேலும், உடல் வெப்பநிலையை தவறாமல் சரிபார்க்க வேண்டும். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.