வேளச்சேரி: பெரும்பாக்கம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் 2 சகோதரிகளுக்கு இடையே பல மாதங்களாக குடும்ப தகராறு உள்ளது. இருவரும் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு, அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 மாதத்திற்கு முன், இரு கோஷ்டியினரும் சராமரியாக ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொண்டனர். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பை சேர்ந்த 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் 2 கோஷ்டிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், அண்ணாசாலையை சேர்ந்த பிரதீப் ரவுடிகளுடன் வந்து கத்தி மற்றும் உருட்டுகட்டைகளால் எதிர் கோஷ்டியினரை கடுமையாக தாக்கினார். இதில், 11 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில், விக்டோரியா, அமலா ஆகியோர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். இவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.