சென்னை: கட்டாய இலவச கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை எளிய பிரிவை சேர்ந்த குழந்தைகள் 25 சதவீத அடிப்படையில் சேர்க்க குலுக்கல் முறை நேற்று நடந்தது. தமிழகத்தில் 2010ம் ஆண்டு முதல் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர் சேர்க்கை தடைப்பட்டது. தமிழகத்தில் 8,628 தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 771 இடங்கள் நிரப்பப்பட இருந்தன. இருப்பினும், மே மாதத்துக்கு பிறகு முதல்கட்ட அறிவிப்பில் 86 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 56 ஆயிரம் பேர் பள்ளிகளில் சேர்ந்தனர். மீதம் உள்ள இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்த மாதம் 12ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நடந்தது.அதில், சேர்க்கை வேண்டி 16,502 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.இவர்களில் தகுதியானவர்களின் பட்டியல் நவம்பர் 11ம் தேதி வெளியிடப்பட்டன.
இதையடுத்து, நேற்று குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேர்வு பெறும் மாணவ மாணவியரின் பெயர்கள், எந்த பள்ளிகளில் சேர்க்கை பெற்றனர் என்பது குறித்த விவரங்கள் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இணைய தளத்தில் வெளியிடப்படும் என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து, நேற்று காலை அந்தந்த தனியார் பள்ளிகளுக்கு இடம் கேட்டு விண்ணப்பித்து இருந்த பெற்றோர் மற்றும் கல்வி அதிகாரிகள் முன்னிலையில், விண்ணப்பித்த மாணவர்கள் பெயர்கள் குலுக்கல் முறையில்தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்கள் அந்தந்த பள்ளிகளில் தகவல் பலகையிலும் ஒட்டப்படும். அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர்கள் முன்னிலையில் இந்த குலுக்கல் நடந்தது.