சென்னை: தமிழ்நாடு அஞ்சல் துறை இயக்குனர் சந்தானராமன் கூறியதாவது: ஓய்வூதியதாரர்களுக்கு ஆயுள் சான்றிதழை (ஜீவன் பிரமான்) டிஜிட்டல் முறையில் வழங்க அஞ்சல் துறை இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி உடன் இணைந்து டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் சேவையை தொடங்கியுள்ளது. ஜீவன் பிரமான் என்பது ஓய்வூதியதாரர்களுக்கான பயோமெட்ரிக் இணைக்கப்பட்ட டிஜிட்டல் சேவையாகும். எந்த ஒரு அரசு நிறுவனத்திடமிருந்தும் ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஓய்வூதியம் பெறுபவர்கள் அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு வருகை தருவதன் மூலமோ அல்லது தபால்காரர், கிராம தபால் ஊழியர் மூலம் வழங்கும் நேரடி வங்கி சேவை மூலமாகவோ ஆயுள் சான்றிதழை பெற்று கொள்ளமுடியும்.
கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் ‘போஸ்ட் இன்போ’ செயலி மூலமோ தங்கள் டிஜிட்டல் லைப் சான்றிதழை உருவாக்க கோரிக்கையை பதிவு செய்யலாம். ஒவ்வொரு வெற்றிகரமான டிஜிட்டல் லைப் சான்றிதழுக்கும் ரூ.70 கட்டணமாக வசூலிக்கப்படும். இவ்வாறு கூறினார்.