சென்னை: தி.நகர் மேட்லி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (40). ஓட்டல் ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (37). கடந்த புதன்கிழமை இரவு உணவு சாப்பிட்டவுடன் தனது குழந்தையுடன் சீனிவாசன் நடைபயிற்சிக்கு சென்று விட்டார். வீட்டில் ராஜேஸ்வரி மட்டும் இருந்துள்ளார். நடைபயிற்சி முடிந்து சீனிவாசன் வீடு திரும்பியபோது, மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தகவலறிந்து வந்த மாம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், சீனிவாசனுக்கு ஜோசியத்தில் அதிக நாட்டம் இருந்துள்ளது. இதனால் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த ஜோசியர் சுவுந்தர்ராஜன் என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. அப்போது, வீடு வாங்க 25 லட்சம் சேர்த்து வைத்துள்ளதாகவும், நல்ல நேரம் இருந்தால் சொல்லுங்கள் என்றும் ஜோசியர் சவுந்தர்ராஜனிடம் சீனிவாசன் கூறியுள்ளார். அதற்கு ஜோசியர், நான் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறேன். இதனால் உங்களுக்கு நான் குறைந்த விலையில் வீடு வாங்கி தருகிறேன் என்று கூறி 25 லட்சத்தை கேட்டுள்ளார். பழக்கமான ஜோசியர் என்பதால் சீனிவாசன் தனது மனைவி ராஜேஸ்வரியின் ஆலோசனையால் பணத்தை ஜோசியரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், நீண்ட நாட்களாகியும் ஜோசியர் வீடு வாங்கி தரவில்லை. இதனால், கொடுத்த பணத்தை சீனிவாசன் திருப்பி கேட்டுள்ளார். அதற்கு ஜோசியர் 5 காசோலைகள் கொடுத்துள்ளார். கொடுத்த 5 காசோலைகளும் பணம் இல்லாமல் திரும்ப வந்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி கடந்த மாதம் 28ம் தேதி ஜோசியரிடம் சென்று பணத்தை கேட்டுள்ளனர். அதற்கு ஜோசியர் எனது மனைவி அசோக் நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ளார். இதனால் உங்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
வேறு வழியின்றி தம்பதி வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர், கணவன் மனைவி இடையே அடிக்கடி இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.