கவுகாத்தி, :கடந்த சில தினங்களுக்கு முன் ஏ.ஐ.யு.டி.எப் கட்சியின் தலைவர் பத்ருதீன் அஜ்மலின் ஆதரவாளர்கள் சிலர், அசாமின் சில்சார் விமான நிலையத்தில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற கோஷங்களை எழுப்பியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாஜக தலைமையிலான வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும், மாநில நிதி, சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சராகவும் உள்ள ஹேமந்த் பிஸ்வா சர்மா, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற கோஷங்கள் குறித்து கண்டன விமர்சனம் செய்திருந்தார். தொடர்ந்து அவர் தனது பேஸ்புக் பதிவில் ஆட்சேபனைக்குரிய கருத்துகளையும் தெரிவித்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ அஜீஸ் அகமது கான் என்பவர், கவுகாத்தியில் உள்ள பங்கர் காவல் நிலையத்தில் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி புகார் அளித்தார். அதையடுத்து இரு வகுப்பினர் இடையே பதற்றத்தை ஏற்படுத்தவும், ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் அமைச்சர் ஹேமந்த் பிஸ்வா சர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.