செங்கல்பட்டு: புத்திமதி கூறிய மாமாவை போதைக்கு அடிமையான இளைஞர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தையூர் கோமான்நகர் பகுதியை சேர்ந்தவர் 55 வயதான சாமுவேல் இவருக்கு மரகதம் என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர்.
இவர் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். சாமுவேலுக்கும் அவரது சகோதரிக்கும் கடந்த 10 வருடங்களாக நிலம் தொடர்பான வழக்கு உள்ளது. சாமுவேலின் சகோதரி மகன் 17 வயதான விமல்ராஜ் கஞ்சா போதைக்கு அடிமையானவர். இந்த நிலையில் சாமுவேல் காவலாளியாக பணியாற்றும் தோட்டத்தில் விமல்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கஞ்சா அடிப்பதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 7 ஆம் தேதியன்று இதைபோல் விமல்ராஜும் அவரது நண்பர்களும் சேர்ந்து கஞ்சா புகைத்துள்ளனர். அதை கண்ட சாமுவேல் அவர்களை அழைத்து புத்திமதி கூறியுள்ளார். ஆனால் போதையில் இருந்த விமல்ராஜ் அவரை சொந்த மாமாவென்று பாராமல் தகாத வார்த்தைகளால் வசைப்பாடியுள்ளார். இதனை தொடர்ந்து தோட்டத்தில் கஞ்சா அடித்தவர்கள் மீது காவல் நிலையத்தில் சாமுவேல் புகார் அளித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த விமல்ராஜ் அவரது நண்பர் சகாயராஜுடன் சேர்ந்து கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர்.
அதன்படி விடியற்காலையில் சாமுவேலுக்காக தோட்டத்தில் காத்திருந்தனர் விமல்ராஜும் அவரது நண்பர் சகாயராஜும் அதேபோல் சாமுவேல் தோட்டத்திற்குள் நுழைய மறைத்து வைத்திருந்த கத்தியால் தலை, கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சாமுவேல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் சாமுவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கொலைசெய்து தலைமறைவான விமல்ராஜையும் அவரது நண்பர் சகாயராஜையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.