காரியாபட்டி: காரியாபட்டி பேரூராட்சி அச்சம்பட்டி 4வது வார்டு பகுதிகளில் குடிநீர் குழாய் மற்றும் குளியல் தொட்டி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் உள்ளது. அச்சம்பட்டி முத்தாலம்மன் கோயில் அருகே உள்ள குடிநீர் தொட்டிக்கான குழாய் பழுதாகியுள்ளது. இதனால் அடிப்படை தேவைகளுக்கு மட்டும் இல்லாமல் அப்பகுதியில் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கும் தண்ணீரை மக்கள் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.
மேலும் நாகம்மாள் கோவில் அருகே உள்ள ஆழ்குழாய், அச்சம்பட்டியில் உள்ள குளியல் தொட்டி, மயானத்தில் உள்ள குளியல் தொட்டியும் செயல்படாமல் உள்ளது. இதனால் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்வதற்கு 1 கி.மீ தூரத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் மக்கள் தினசரி தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம், 4வது வார்டு அடிப்படை பிரச்னைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.