×

கொரோனா வைரஸ் பரவலால் திக்குமுக்காடும் அமெரிக்கா!: வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியிருக்கிறது. 210 நாடுகளில் தீவிரமாக பரவி வரும் கோவிட் - 19 கொல்லுயிரி, அமெரிக்காவில் அதிவேகம் எடுத்துள்ளது. இதுவரை 1 கோடியே 3 லட்சம் பேர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரேநாளில் மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 512 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, கொரோனா தொற்றால் பாலியானவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து  43 ஆயிரத்து 768ஆக அதிகரித்துவிட்டது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் தரமான முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம் அறிவுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து அக்கழகத்தினர் தெரிவித்ததாவது, குழுக்களை ஒன்றிணைக்கும் அனைவரும் கோவிட் சோதனை செய்துகொள்வது அவசியம். பொது வெளிகளில் செல்லும் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களால் இளைய தலைமுறையினருக்கு தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அனைவரும் உயர்தர முகக்கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பொதுவெளியில் இருக்கும் நேரம் முழுமைக்கும் N - 95 வகை முகக்கவசத்தை அணிய வேண்டும். அதேபோல் சமூக இடைவெளியை பின்பற்றுவதில் கவனம் வேண்டும் என தெரிவித்தனர். கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. 85 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ள கொரோனா, 1 லட்சத்து 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பறித்து சென்றுள்ளது. பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், அர்ஜெண்டினா, பிரிட்டன், கொலம்பியா ஆகிய நாடுகளிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 7 லட்சத்தை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : America ,spread , Corona, USA, number of victims, 1 crore
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...