×

சென்னையில் புல்லட்டை தொடர்ந்து டியோ இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடும் கும்பல் கைது

சென்னை: சென்னையில் புல்லட்டை தொடர்ந்து டியோ இருசக்கர வாகனங்களையும் குறிவைத்து திருடும் கும்பலையும் போலீசார் கைது செய்துள்ளனர். கத்திரிக்கோலை ஆயுதமாக பயன்படுத்தி டியோ வாகனங்களின் பூட்டை உடைத்து கடத்துவது எப்படி என போலீசார் முன்னிலையில் செய்து காட்டினர்.

சென்னையில் புல்லட் வாகனங்களை குறிவைத்து திருடிய கும்பலை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். வாடிக்கையாளர்கள் விரும்பும் நிறத்தில் உள்ள புல்லட்டுகளை தேர்வு செய்து திருடி குறைந்த விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. புல்லட்டை தொடர்ந்து தற்போது டியோ ரக வாகனங்கள் அதிகளவில் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

வடசென்னைக்கு உட்பட்ட திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, எண்ணூர் உள்ளிட்ட இடங்களில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த டியோ வாகனங்கள் மாயமாகின. அதுகுறித்து விசாரணையில் இறங்கிய தனிப்படை போலீசார் 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

கத்திரிக்கோல் உதவியுடன் திருட்டை அரங்கேற்றியதாக கூறிய அவர்கள் வாகனங்களின் பூட்டுக்களை உடைத்து கடத்துவது எப்படி என்பது குறித்தும் செய்து காட்டினர். கைதான 5 பேரில் ராகேஷ், தருண் கிருஷ்ணா ஆகியோர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதர 3 பேர் சிறுவர்கள். டியோ ரக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள் குறித்து திருட்டு கும்பலுக்கு உளவு சொல்வது சிறுவர்கள் தானாம். திருடப்படும் டியோ வாகனங்களை பெண்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர். வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் டியோ வாகனங்களை விரும்புவதால் அதனை மட்டுமே குறிவைத்து திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைதானவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் சுனாமி குடியிருப்பு வளாகம் மற்றும் கடற்கரை ஓரங்களில் மறைத்து வைத்திருந்த 11 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வாகன திருட்டுக்கு துணைபோன சிறுவர்கள் மூவரும் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

Tags : arrests ,Dio ,gang ,Chennai , Arrest, vehicle, theft
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் உணவக...