திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சொப்னா கும்பல், பல்வேறு வழிகளிலும் கமிஷன் பெற்று வருமானம் பார்த்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் லைப் மிஷன் திட்டத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதற்கிடையே லைப் மிஷன் திட்ட ஒப்பந்தத்தை பெற சொப்னாவுக்கு ரூ3.80 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் இந்த தொகை திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் நிதிப்பிரிவு தலைவராக இருந்த எகிப்து நாட்டு குடிமகனான காலித் அலியிடம் கொடுக்கப்பட்டது பின்னர் தெரியவந்தது.
அந்த பணத்தில் இருந்துதான் காலித் அலி, சொப்னாவுக்கான பங்கை கொடுத்துள்ளார். இதையடுத்து காலித் அலி தனது பங்கு கமிஷனான ரூ1.30 கோடியை டாலர்களாக மாற்றி தனது சொந்த ஊரான கெய்ரோவுக்கு கடத்தி சென்றுள்ளார். அப்போது அவருடன் சொப்னா மற்றும் சரித்குமாரும் சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் மஸ்கட்டில் இறங்கி பின்னர் துபாய் சென்றுள்ளனர். காலித் அலி கெய்ரோவுக்கு பறந்துள்ளார். தங்க கடத்தல் விவகாரம் வெளியான ஒருசில நாட்களிலேயே காலித் அலி தனது நாட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் காலித் அலியை கைது செய்து விசாரிக்க சுங்க இலாகா தீர்மானித்துள்ளது. இதற்கு அனுமதி கோரி நேற்று கேரள உயர் நீதிமன்றத்தில் சுங்க இலாகா மனுதாக்கல் செய்துள்ளது. மேலும் ‘இன்டர்போல்’ உதவியுடன் காலித் அலியை கைது செய்ய தீர்மானித்துள்ளதாகவும் சுங்க இலாகா தெரிவித்துள்ளது.