புவனேஸ்வர்: ஒடிசா மாநில ஆளுநர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா மாநில ஆளுநர் கணேஷி லால், அவரது மனைவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்கள் அனைவரும் எஸ்யுஎம் கோவிட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் கண்காணிப்பில் உள்ள அவர்களின் நிலைமை சீராக இருப்பதாகவும், அவர்களின் சளி மாதிரி சோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, ஆளுநர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.