சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 10, 11ம் தேதி தென் மாவட்டங்களில் முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு கடந்த மாதமே முதல்வர் ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதிமுக முதல்வர் வேட்பாளர் பிரச்னை பெரிய அளவில் நடந்துகொண்டிருந்ததால் இந்த மாவட்டங்களில் கடந்த மாதம் நடைபெற இருந்த ஆய்வுப்பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, அக்டோபர் முதல் வாரம் இந்த மாவட்டங்களில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள இருந்தார். ஆனால், முதல்வரின் தாயார் மரணம் அடைந்ததால் ஆய்வுப்பணி 2வது முறையாக ரத்து செய்யப்பட்டது.
இதனால், 3வது முறையாக கடந்த 29ம் தேதி தூத்துக்குடி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததை தொடர்ந்து மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு 31-ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் 63 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனிடையே அடுத்த மாதம் தூத்துக்குடியில் முதல்வர் ஆய்வு மேற்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நவ.10-ம் தேதி கன்னியாகுமாரியிலும், 11-ம் தேதி தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்திலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து 3 மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
முதல்வரின் பயண விவரம்:
10-ம் தேதி நாகர்கோவிலுக்கு வரக்கூடிய முதல்வர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் நேரடியாக நாகர்கோவிலுக்கு வரக்கூடிய தமிழக முதல்வர், பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிற நிகழ்ச்சில் முடிவுற்ற பல பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார். அதுமட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வு செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று இரவு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிவிட்டு அதற்கு அடுத்த நாள் 11-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்து செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.