×

தங்கம் கடத்தல் வழக்கில் கைதான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் தமிழகத்தில் பினாமி பெயரில் முதலீடு: அமலாக்கத்துறை விசாரணையில் பகீர் தகவல்

திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை மத்திய அமலாக்கத்துறை 7 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. ஆனால் விசாரணைக்கு அவர் முழு  ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தெரிகிறது. இருப்பினும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சிவசங்கரின் பினாமி பெயரில் கேரளா மட்டுமல்லாது, தமிழகத்திலும் சொத்துக்கள் உள்ளது தெரியவந்துள்ளது. முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளராக வருவதற்கு முன்பு, சிவசங்கர் கேரள மின்வாரிய தலைவராக இருந்துள்ளார். அப்போது குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சிலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து சில காற்றாலைகளில் பினாமி பெயரில் சிவசங்கர் முதலீடு செய்து இருக்கிறார். சிவசங்கரும், அவரது ஆடிட்டர் வேணுகோபாலும் வாட்ஸ்-அப் மூலம் ஏராளமான தகவல்களை பரிமாறி இருக்கின்றனர். இந்த விபரங்களை 2 பேரும் அழித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவற்றை மத்திய அமலாக்கத்துறையினர் தொழில்நுட்ப உதவியுடன் மீட்டெடுத்து உள்ளனர். தங்க கடத்தல் விபரம் வெளியானவுடன், நாகர்கோவிலுக்கு சென்று காற்றாலை நிறுவனத்துக்கு சொந்தமான ஓய்வு விடுதியில் தலைமறைவாக தங்கியிருக்குமாறு சிவசங்கர் தனது ஆடிட்டர் வேணுகோபாலிடம் கூறியதும் இடம் பெற்றிருந்தது. இது தொடர்பாக நடத்திய விசாரணையில், சிவசங்கருக்கு ஆரல்வாய்மொழியில் உள்ள சில காற்றாலைகளில் பினாமி பெயரில் முதலீடு செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

அங்கு சிவசங்கர் எவ்வளவு முதலீடு செய்துள்ளார் என்பது குறித்து விசாரிக்க மத்திய அமலாக்கத்துறை விரைவில் ஆரல்வாய்மொழி வர உள்ளது. இதற்கிடையே திருவனந்தபுரம் அமீரக துணைத்தூதர் ஜமால் அல்சாபிக்கும், ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு ஜெர்மன் நிறுவன காற்றாலையில் முதலீடு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை சொப்னா விசாரணையின்போது தெரிவித்துள்ளார். தூதரக செயலாளர் பணியில் இருந்து விலகும்போது காற்றாலையில் பங்குதாரராக தன்னை சேர்ப்பதாக துணைத்தூதர் உறுதியளித்திருந்தார் எனவும் சொப்னா வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

* கூடுதல் தலைமை செயலாளரிடமும் விசாரணை
கேரள முதல்வர் பினராய் விஜயனின் அலுவலகத்தில் உள்ள 2 முக்கிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா மற்றும் அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளது. இதற்காக விரைவில் அவர்களை கொச்சிக்கு வரவழைக்க நோட்டீஸ் வழங்கப்படவுள்ளது. அந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினால், சிவசங்கர் குறித்த மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என கருதப்படுகிறது. இதற்கிடையே கேரள அரசின் கூடுதல் தலைமைச்செயலாளராக இருந்த ஓய்வுபெற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரியிடமும் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.

Tags : Sivasankar ,IAS , IAS officer Sivasankar arrested in gold smuggling case
× RELATED ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு வினாத்தாள் மொழிமாற்றம்: ஐகோர்ட் யோசனை