குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை மணப்பாறை சாலையில் ரயில்வே கேட் உள்ளது. ரயில்வே கேட் அருகில் அண்ணா நகர் உழவர் சந்தைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினந்தோறும் ரயில் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் என ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ரயில்வே கேட் அருகே உள்ள சாலையோரம் பட்டுப்போன மரங்கள் ஏராளமாக உள்ளன. தற்போது மழைக்காலம் என்பதால் எந்நேரமும் மரங்கள் முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அதனால் பொதுமக்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் ரயில்வே நிர்வாகம் சாலையோரம் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.