அண்ணாநகர்: தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் புதிய அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, சாய்தள பாதை அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், தேர்தல் நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.எனினும், காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித வசதியும் செய்து தரப்படாததால் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோயம்பேடு காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற சிதம்பர முருகேசன், மாற்றுத்திறனாளிகள் சிரமத்தை குறைக்க கோயம்பேடு காவல் நிலையத்தில் சாய்தள பாதை மற்றும் வீல்சேர் போன்ற வசதிகளை செய்துள்ளார்.மேலும், மாற்றுத்திறனாளிகளை வீல்சேரில் அமர வைத்து ஒரு காவலர், இன்ஸ்பெக்டரிடம் நேரடியாக புகார் அளிப்பதற்கு உதவி செய்து வருகிறார். இன்ஸ்பெக்டரின் இந்த நடவடிக்கை மாற்றுத்திறனாளிகளிடம் வரவேற்பை பெற்றுயுள்ளது.