திருச்சுழி: சோலார் மின் திட்டத்தால் இடமாறிய வன விலங்குகளால், விவசாயிகள் தடுமாறி வருகின்றனர். திருச்சுழி, நரிக்குடி பகுதியில் 400க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் முழுவதும் விவசாயத்தை நம்பியே உள்ளன. 10 வருடங்களுக்கு மேலாக சரிவர மழை பெய்யாததால், விவசாய நிலங்களை பராமரிக்க படாமல் போடப்பட்டதால் கருவேலம் வளர்ந்து அடர்ந்து காணப்படுகின்றன.இதனால் மான்,மயில்,முயல்,காட்டுபன்றி என ஏராளமான வன விலங்குகள் இனபெருக்கமாகி அதிகளவில் காணப்படுகின்றன. தற்போது திருச்சுழி,நரிக்குடி பகுதியில் சுமார் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை அழித்து சோலார் மின் நிலையம் அமைத்துள்ளனர்.
இப்பகுதியில் இருந்த வன விலங்குகள் இடமாறி நரிக்குடி பகுதியில் உள்ள மறைக்குளம், நாலுர், குறவைக்குளம், அழகாபுரி, சீனிமடை, உலக்குடி பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளன. பலன் தரும் நேரத்தில் காட்டுப்பன்றிகள் கடலை செடிகளை நாசம் செய்வதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இப்பகுதியில் செவல் மண் என்பதால் கடலை விவசாயம் செய்தால் அதிக மகசூல் கிடைக்குமென விவசாயிகள் பெரும்பாலானோர் கடலை சாகுபடி செய்கின்றனர். தற்போது அதிகளவு மழை பெய்யும் என நம்பி பலர் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கடலை பயிரிட்டுள்ளனர். ஓரளவிற்கு பலன் தரும் தருவாயில் உள்ள நிலையில் காட்டு பன்றிகள் மற்றும் விலங்குகள் கடலை செடிகளை கிளறி வீணடிக்கின்றன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் தடுமாறுவதோடு நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.