கொளத்தூர்: நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைக்கு மாறாக 7.5% ஆக தமிழக அரசு ஏன் குறைத்தது என திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் 2017-18ம் கல்வியாண்டில் அனைத்து மருத்துவ கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுகலை அளவிலான பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடந்து வருகிறது. அதன்பின்னர் மாநிலத்தில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேர்க்கை குறைந்து விட்டது. இதுகுறித்தான காரணங்களை மதிப்பிடவும், பகுத்தாராயவும் மற்றும் தீர்வு நடவடிக்கைகளை அறிவுறுத்தவும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையின் கீழ் ஆணையம் ஒன்றை அரசு அமைத்தது.
அதன்முடிவில் மாநில அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் மேல்நிலைப் பள்ளிப்படிப்பு வரை படித்த மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்பின் சேர்க்கைக்காக 10% இடங்களை ஒதுக்கீடு செய்யப்பட முடியும் என பரிந்துரைத்தது.
இருப்பினும், நீதியரசர் கலையரசன் குழு 10% உள்ஒதுக்கீடு தர பரிந்துரைத்த நிலையில், மருத்துவப்படிப்புகளில்அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்த மசோதா கடந்த மாதம் 15-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஏற்கனவே 45 நாட்களாகிவிட்ட நிலையில் அதுகுறித்து முடிவெடுக்க இன்னும் 3-4 வாரங்கள் தேவை என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கொரோனா ஊரடங்கிற்கு பிறகு முதல்முறையாக தனது சொந்த சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் கிழக்கு பகுதி செயலாளர் ஐசிஎப் முரளிதன் இல்லத்திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று திருமணத்தை தலைமையேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து மணக்களை வாழ்த்தினார். தொடர்ந்து, நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு, சேவகம் செய்து அடிமை ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. அதிமுக ஆட்சியை பொறுத்தவரை கொள்ளையடிப்பதிலும், ஊழல் செய்வதிலுமே முழுகவனம். தமிழக மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லாத அதிமுக ஆட்சியை அகற்றப்பட வேண்டும்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% உள்ஒதுக்கீடு தர முன்னாள் நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைந்திருந்தது, நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைக்கு மாறாக 7.5% ஆக தமிழக அரசு ஏன் குறைத்தது என கேள்வி எழுப்பியுள்ளார். 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை. 7.5% இடஒதுக்கீடு மசோதாவை நீர்த்துப்போக செய்யும் நடவடிக்கையில் தமிழக ஆளுநரின் செயல்பாடு உள்ளது என்றும் தெரிவித்தார்.