×

மரணத்திற்கு முன்பே தனக்கு இரங்கல் குறிப்பு எழுதிய கார் பந்தய வீரர்: சென்னையில் நெகிழ வைத்த சம்பவம்

சென்னை: பிரபல கார் பந்தய வீரரும், தொழிலதிபருமான எஜ்ஜி கே உமாமகேஷ் மரணத்திற்கு முன்பே தனக்கு தானே இரங்கல் குறிப்பு எழுதி வெளியிட்டு இருப்பது பலரையும் நெகிழ வைத்துள்ளது. பிரபல கார் பந்தய வீரர், நடிகர், தொழிலதிபர் என பன்முக திறமை கொண்டவர் சென்னையை சேர்ந்த எஜ்ஜி கே உமா மகேஷ் (71). சில நாட்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், உயிர் பிழைப்பதற்கு 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அறுவை சிகிச்சைக்கு முன்பாக தனக்கு தானே இரண்டு இரங்கல் மடல்களை் எழுதியுள்ளார். தான் மரணமடைந்தால், இந்த இரங்கல் அஞ்சலியை தனது பேஸ்புக் பக்கத்திலும் செய்தித்தாள்களிலும் பிரசுரிக்க வேண்டுமென குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன், அவரது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக மரணத்தை தழுவினார். அவரது விருப்பப்படியே இரங்கல் குறிப்புகள் வெளியாயின. அதில், எனது பார்ட்டி முடிந்துவிட்டது. எனது பின்னால் இருப்பவர்களுக்கு எந்த ஹேங் ஓவரும் இருக்காது என்று நம்புகிறேன். நன்றாக வாழுங்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். ஏதோ இருக்கிறோம் என்பதைவிட மகிழ்வுடன் வாழுங்கள். இந்த பூமி எனும் கிராமத்தில் மதசார்பற்றவனாக வாழ்ந்தவன் என்று கூறியுள்ளார். பேஸ்புக் பக்கத்தில் எந்த அளவுக்கு கார்கள் மீது பிரியம் வைத்திருந்தார் என்பதை உணர்ந்து கொள்ளும் வகையில், அவர் எழுதியிருக்கிறார். எனது விண்டேஜ் வாகனம் புதுப்பிக்கும் பணி நடந்தது. இந்தியாவின் சிறந்த மெக்கானிக்குகள் நவீன கருவிகள் நிபுணத்துவம் ஆகியவற்றின் மூலமாக உயிர்ப்பிக்கும் வாய்ப்பு இருந்தது.

ஆனாலும் துரதிருஷ்டவசமாக எஞ்சின் அறையில் தெறிப்பு விழுந்துவிட்டது. பிஸ்டன்கள் செயலிழந்துவிட்டன. இந்த பழைய வாகனம் இப்போது உடைக்கும் நிலைக்கு வந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக சில பாகங்கள் மட்டும் இதர விண்டேஜ் வாகனங்களுக்கு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. உலகின் பல்வேறு வகையான நிலப்பரப்பிலும் 72 ஆண்டுகள் இந்த வாகனம் சென்று வந்துள்ளது. நிச்சயம் இது நினைவு கொள்ளப்படும் என எழுதி உள்ளார். அவரது இந்த இரங்கல் குறிப்புகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், ஒருவர் தான் இறக்க போகிறோம் என தெரிந்து, தனக்கு தானே இரங்கல் குறிப்பு எழுதி வெளியிட்டு இருப்பது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Tags : Car racer ,death ,incident ,Chennai , Car racer who wrote a note of condolence to himself before his death: The incident that moved in Chennai
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...