புதுடெல்லி :வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு 10 சதவீதத்தை உயர்த்தி மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி வழங்கி, அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. கொேரானா தொற்று உள்ள காலங்களில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு வரம்பு 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு தேர்தல் செலவின அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், ஒரு மக்களவை மற்றும் 59 சட்டமன்ற இடங்களுக்கும் இடைத்தேர்தல்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்தல்களுக்கும் செலவினங்களை 10 சதவீதம் உயர்த்த, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.
அதன் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மக்களவை தேர்தலில் பிரசாரம் செய்ய ஒரு வேட்பாளர் செய்யக்கூடிய அதிகபட்ச செலவு இப்போது ரூ.77 லட்சம் ஆகும். இது இதுவரை ரூ.70 லட்சமாக இருந்தது. சட்டமன்ற தேர்தல் பிரசார செலவாக ரூ.28 லட்சத்திலிருந்து ரூ.30.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் மக்களவை தேர்தல் நடந்தால் ஒரு வேட்பாளர் தேர்தல் செலவு ரூ.77 லட்சமாகவும், சட்டசபை தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு ரூ.30.8 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.